தேமுதிக தேர்தல் அறிக்கை: எல்லாம் ஓகேதான்... நிறைவேற்றத்தான் 4 மாநில பட்ஜெட் பணம் தேவை!
சென்னை: தேமுதிகவின் தேர்தல் அறிக்கை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த வேடலில் தேமுதிக மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டில், தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் .
இந்த மாநாட்டில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேட்பாளர் நேர்காணலுக்குப் பிறகு அதுகுறித்து கூறப்படும் என விஜயகாந்த் அறிவித்தார். வீடியோ வடிவில் வித்தியாசமாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நம்மாழ்வார் விவசாயத் திட்டம்...
நம்மாழ்வார் விவசாயத்திட்டம் என்ற பெயரில் இயற்கை முறையில் விவசாயத்தை மேம்படுத்துவது, மானிய விலையில் நாற்றுக்கள், உரங்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை தேமுதிக கூறியுள்ளது. இதனால் ஐந்து வருடங்களில் 25 ஆயிரம் விவசாயிகள் பலன்பெறுவார்கள்.
உணவு உற்பத்தி...
பால் மற்றும் உணவு உற்பத்தியை மேம்படுத்தி, தன்னிறைவு பெற்ற மாநிலமாக மட்டுமல்லாமல், ஏற்றுமதியை அதிகரிக்க செய்யப்படும்.
பால் உற்பத்தி...
தமிழகத்தில் ஏழுகோடி மக்களுக்கு பால் தேவை. நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு நபருக்கு 150 மில்லிலிட்டர் எனக்கணக்கிட்டால், 1.25 கோடி லிட்டர் பால் தேவைப்படும். பிற தேவைக்கேற்ப அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படும். பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்க விலை நிர்ணயம் செய்யப்படும்.
கீழ்வெண்மணி ஓய்வூதியத் திட்டம்...
60வயது நிரம்பிய நிலம் இல்லாத விவசாயிகள் அனைவருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் ஆண், பெண் பேதமின்றி மாதந்தோறும் ரூ. 2500 ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 30 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள்.
சிங்காரவேலன் மீனவர் ஓய்வூதிய திட்டம்...
60 வயது நிரம்பிய ஆண், பெண் மீனவர்களுக்கு மாதம் ரூ. 2500 ஓய்வூதியமாக வழங்கப்படும். இதனால் 10 லட்சம் மீனவர்கள் பயன் பெறுவார்கள்.
கக்கன் கைத்தறி நெசவாளர்கள் ஓய்வூதிய திட்டம்...
60 வயது நிரம்பிய ஆண், பெண் கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 2500 ஓய்வூதியமாக வழங்கப்படும். இதனால் 10 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன் பெறுவார்கள்.
அப்துல்கலாம் கிராம பொலிவு திட்டம்...
12,420 கிராமங்களுக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமங்களில் வாழ்வோரின் குடும்ப வருமானம் மாதம் ரூ.25 ஆயிரம் ஆக உயர வழி வகை செய்யப்படும். குடிசைகள் அகற்றப்பட்டு கல் வீடுகள் கட்டித் தரப்படும்.
கைத்தொழில்...
விவசாயம், ஆடு, மாடு, மீன், கோழி, பட்டுப்பூச்சி, தேனீ மற்றும் பழமரம் வளர்த்தல் ஊக்குவிக்கப்படும். கைத்தொழில் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை அரசே கொள்முதல் செய்துகொள்ளும். பழங்கள் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
கல்வி...
சிறப்புக் குழந்தைகள் தங்கிப் படிக்க பிரத்யேக வசதிகளுடன் கூடிய பள்ளிகள், கல்லூரிகள் அமைக்கப்படும். இதேபோல், திருநங்கைகளுக்கும் கல்வி வசதி ஏற்படுத்தித் தரப்படும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் மனிதவள ஆலோசகர் நியமிக்கப்படுவார். பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும். இது தவிர குறைந்த விலையில் மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா, பெண் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
பள்ளி கல்லூரியில் பாடப்புத்தகம்:
மாணவர்களிடம் நாட்டுப்பற்றும் மற்றும் மொழிபற்றும் வளரவேண்டும். அதற்காக உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் எண்சரிதம், காந்திஜியின் சத்தியசோதனை, மதன் அவர்களின் வந்தார்கள், வென்றார்கள், ம.பொ.சி அவர்களின் விடுதலைப்போரில் தமிழகம், எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் எனது இந்தியா போன்ற நூல்கள், பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்:
கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓவியர்கள், சமூகத்தில் பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் என, அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களின் அறிவு வளர்ச்சி, உலக நடப்பு, ரசனை மேம்பாடு என பாடத்திட்டம் தவிர்த்து, பிற உலக விஷயங்களை கலந்துரையாடல் பாணியில் நடத்துவார்கள்.
சுகாதாரம்...
385 தாலுக்காவிலும் சுகாதாரமான, 24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனைகள் கட்டப்படும். அங்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ வசதி செய்து தரப்படும். இதன்மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
வேலைவாய்ப்பு...
385 தாலுக்காவிலும் புதிய வணிக வளாகங்கள் கட்டி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 2 லட்சம் பேர் பயனடைவார்கள். சுற்றுலா மேம்படுத்தப்படும். தனியாருடன் சேர்ந்து பல தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சமூக பாதுகாப்பு திட்டங்கள்...
அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான குடியிருப்புகள், குறைந்த முன்பணம், குறைந்த வட்டி, எளிய தவணை முறையில், எல்&டி. போன்ற கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்களுக்கு தரமான குடியிருப்புகள், சலுகை விலையில் கட்டித்தரப்படும். ஒரு சதுரஅடி 2 ஆயிரம் ரூபாய் முதல் அதிக பட்சமாக 5 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் வகையில் குடியிருப்பிகள் அமைக்கப்படும்.
தமிழகத்திலுள்ள இயற்கை வளங்கள்...
தமிழகத்திலுள்ள அனைத்து இயற்கை வளங்களும் தேசிய மயமாக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.
எரிசக்தி...
தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 45க்கும், டீசல் ரூ. 35 க்கும் விலை நிர்ணயம் செய்யப்படும். தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரிகள் இனிமேல் பாதியாக குறைக்கப்படும். தேவைப்படுமெனில் தமிழக அரசு அந்த நிறுவனத்தை தேசிய மயமாக்கும்.
தமிழகத்திலுள்ள ஆறுகள்...
தமிழகத்திலுள்ள ஆறுகளை ஒன்றிணைப்பதன் மூலம் பாசன வசதி, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்...
தமிழக மக்கள் ரேஷன் கடைகளில் கால்கடுக்க நிற்கும் காலம் இனி மலையேறிவிடும். அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் அவர்களின் இல்லத்திற்கே கொண்டுவந்து சேர்க்கப்படும். இதற்காக அவர்களிடம் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.
விரைவில் அடுத்த பாகங்கள்...
தேமுதிகவின் சட்டசபைத் தேர்தல் அறிக்கையின் முதல்பாகம் மட்டுமே இது. மக்களிடம் கருத்துக்களைக் கேட்டு அடுத்த இரண்டு பாகங்கள் விரைவில் வெளியிடப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.