தேமுதிகவின் புதிய கொள்கை பரப்பு செயலராக முல்லைவேந்தன் நியமனம்
சென்னை: தேமுதிகவின் புதிய கொள்கை பரப்பு செயலராக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலராக இருந்தவர் எம்.எல்.ஏ. சந்திரகுமார். மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததைக் கண்டித்தும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தியும் கட்சித் தலைமைக்கு எதிராக சந்திரகுமார் தலைமையில் 10 முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.
இதனைத் தொடர்ந்து சந்திரகுமார் உட்பட 10 நிர்வாகிகளையும் கட்சியைவிட்டே டிஸ்மிஸ் செய்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 10 நிர்வாகிகளும் போட்டி தேமுதிகவை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிகவின் புதிய கொள்கை பரப்பு செயலராக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை நியமித்துள்ளார் விஜயகாந்த். திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட முல்லைவேந்தன் அண்மையில் தேமுதிகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.