தொகுதியை விட்டு போய்விடு... வீரலட்சுமியை மிரட்டினாரா தேமுதிகவின் அனகை முருகேசன்?
சென்னை: பல்லாவரம் சட்டசபை தொகுதியில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் அனகை முருகேசன் மிரட்டியதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணிக்கு திடீரென ஆதரவைத் தெரிவித்தார் தமிழர் முன்னேற்றப்படை கட்சித் தலைவர் வீரலட்சுமி. பின்னர் மதிமுக பொதுச்செயலர் வைகோவுடன் சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
வீரலட்சுமிக்கு பல்லாவரம்
மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போது, வீரலட்சுமியின் கட்சிக்கும் ஒரு இடம் ஒதுக்கப்படும் என வைகோ அறிவித்தார். இதன்படி பல்லாவரத்தில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் வீரலட்சுமி போட்டியிடுகிறார். இதேபோல் தமிழ்ப் புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன் தாராபுரம் தொகுதியில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
மிரட்டினாரா அனகை முருகேசன்?
பல்லாவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நடிகை சி.ஆர். சரஸ்வதி, திமுக வேட்பாளராக இ. கருணாநிதி ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் பல்லாவரம் தொகுதி வேட்பாளராக வீரலட்சுமியை அறிவித்ததை காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலர் அனகை முருகேசன் விரும்பவில்லையாம்; இதனால் வீரலட்சுமியிடம் பல்லாவரம் தொகுதியை விட்டுப் போய்விடு என அனகை முருகேசன் மிரட்டினாராம்... என ஒரு தகவல் காட்டுத் தீயாக பரவியது.
வீரலட்சுமி மறுப்பு
இது தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் வீரலட்சுமியோ, அண்ணன் அனகை முருகேசனை நேற்றுதான் பார்த்து சால்வை போட்டேன்; அப்போது மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் உன்னை ஜெயிக்க வைப்போம் சகோதரி என்றார்.
வழக்குதான் இனி...
அதற்குள் இப்படி ஒரு வதந்தியை திமுகவினர் கிளப்பிவிட்டுவிட்டார்களே என ஆதங்கப்படுகிறார் வீரலட்சுமி. அத்துடன் இதுபோல் வதந்தியை கிளப்பினால் வழக்கு போட்டுவிடுவேன் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் வீரலட்சுமி.