திமுக கூட்டணியில் தேமுதிக இணையும்... நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: பாஜக -திமுக - தேமுதிக கூட்டணி உருவாகும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்துக்களுக்கு எல்லாம் அதிமுகவின் மகளிர் அணி பதில் சொல்லும் என்று கூறியுள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை வந்த அவர் வேலுநாச்சியார் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்கள் யார் வந்தாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சேர வாய்ப்பிருக்கிறது என்றார்.
தமிழகத்தில் இல்லாத ஒரு கட்சியை (த.மா.கா.) பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை. தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம், வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய வேலை இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 144 தடை உத்தரவு போட்டுவிட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. அதுபோல் இந்த தேர்தலில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் தேர்தல் கமிஷனின் மிகப்பெரிய வேலையாக இருக்கும். அதை செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் நம்பிக்கையை உண்மையாக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் திமுக உடனான கூட்டணி குறித்த அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவாரா? பார்க்கலாம்.