சட்டப்பேரவை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
சென்னை: விலைவாசி உயர்வு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்த காரணத்தால் தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் அமைச்சர் வேளாண்மைத்துறை அமைச்சர் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தேமுதிக எம்.எல்.ஏ சேகர், தமிழ்நாட்டில் விலைவாசி அதிகரித்துவிட்டது. தமிழக பெண்கள் வெங்காயம் இல்லாத சாம்பார் வைப்பதற்கான புதிய காய்கறியை கண்டுபிடிக்கவேண்டும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
அப்போது குறிக்கிட்ட வேளாண்மைத்துறை அமைச்சர், தமிழ்நாட்டில் வெங்காயம் விலை உயரவில்லை என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
சபாநாயகர் அதற்கு அனுமதி மறுக்கவே தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏக்கள், கடந்த 16ம் தேதி மதல் விலைவாசி உயர்வு பற்றி பேச அனுமதி கேட்பதாகவும், சபாநாயகர் அனுமதிக்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.