அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுக்கு எதிர்ப்பு: தேமுதிக வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தேமுதிக தலைவரை அவதூறாக பேசியதாக அக்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர்.
சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கொள்கை விளக்க குறிப்பு ஒன்றினைத் தாக்கல் செய்தார், அதில்
சென்னை மோனோ ரயில் திட்டத்தை பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் 43.48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 திட்டங்களாக மறுசீரமைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி திட்டம் 1-ல் பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரையில் மற்றும் இணைப்பாக போரூர் முதல் வடபழனி வரை 20.68 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்படும். திட்டம் 2-ல் வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கிலோ மீட்டர் தூரத்துக்கும் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவையில் மோனோ ரயில்
கோவை நகரில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்வதற்கான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் அதில் கூறி இருந்தார்.
தொடர்ந்து போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
ஏ.சி. வால்வோ பஸ்
அப்போது, தேமுதிக எம்.எல்.ஏ பாஸ்கர், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு ஏ.சி. வால்வோ பஸ் இயக்கப்படும் என்று அறிவித்தீர்களே? அது எந்த நிலையில் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நீண்ட தூரத்துக்கு செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் 477 புதிய பஸ்களை முதல்வர் வழங்கியுள்ளார். மாவட்ட தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு ஏ.சி வால்வோ பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டதில் முதலில் மதுரை, கோவையில் இருந்து இந்த பஸ்கள் விடப்படும். விரைவில் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என்றார்.
மோனோ ரயில் திட்டம்
இதனைத் தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ பாஸ்கர், மோனோ ரயில் திட்டம் சென்னையில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது எந்த நிலையில் உள்ளது? என்று கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி, மோனோ ரயில் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இது இறுதி செய்யப்படும். மோனோ ரயில் திட்டத்துக்கு முதல்வர் விரைவில் அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்படும். இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது கூறினார்.
தேமுதிக வெளிநடப்பு
தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்தார். இதற்கு தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். சபாநாயகரிடம் விவாதம் செய்தனர். இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பேரவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவினர், அமைச்சர் செந்தில் பாலாஜி தேமுதிக தலைவரை அவதூறாக பேசியதாக புகார் தெரிவித்தனர்.