கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.. காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!
சென்னை: வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு திமுக - அதிமுகவுக்கு ஆட்டம் காட்டி வந்த தேமுதிகவின் நிலை மிகப் பரிதாபமாக மாறியுள்ளது இந்த சட்டசபைத் தேர்தலில். இதுவரை இல்லாத அளவு மிக மோசமான வாக்குகளை தேமுதிக வாங்கியுள்ளது. இது அக்கட்சிக்கு மிகப் பெரிய அடியாகும்.
வாக்கு வங்கியை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் நடத்திய கட்சி தேமுதிக. கொள்கை என்று எதுவுமே இல்லாமல் தன்னிடம் இருந்த வாக்கு பலத்தை மடடுமே வைத்து மாறி மாறி பேரம் பேசி மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது தேமுதிக. இன்று இக்கட்சிக்கு மக்கள் பெரிய அடி கொடுத்துள்ளனர்.
நீங்கள் பேரம் பேசவா நாங்கள் உங்களுக்கு வாக்குப் போட்டோம் என்று முகத்தில் அடித்தாற் போல மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
கடந்த 2006 தேர்தலில் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது தேமுதிக. அப்போது அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. விஜயகாந்த்தைத் தவிர யாருமே மக்களுக்குத் தெரிந்த முகம் இல்லை. அத்தேர்தலில் தேமுதிக 10 சதவீத வாக்குகளைப் பெற்று அனைவரையும் மிரள வைத்தது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி மீண்டும் தனித்துப் போட்டியிட்டது தேமுதிக. . அத்தேர்தலில் அக்கட்சிக்கு 10.3 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதனால் புதிய மாற்று சக்தியாக விஜயகாந்த் வந்திருப்பதாக மக்கள் நினைக்க ஆரம்பித்தனர். திராவிடக் கட்சிகள் யோசிக்க ஆரம்பித்தன.
இதையடுத்து விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க திமுக, அதிமுக இரண்டுமே களம் குதித்தன. இதையடுத்து இருவருடனும் பேரம் பேச ஆரம்பித்தது தேமுதிக. அதில் அதிமுகவுடன் பேரம் படிந்தது. 2011 சட்டசபைத் தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி வைத்து சந்தித்தார் விஜயகாந்த். எதிர்க்கட்சியாக உருவெடுத்தது தேமுதிக. பெரிய அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு தேமுதிகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சரியத் தொடங்கியது
இந்த நிலையில் அதிமுகவுடன் கசப்புணர்வு ஏற்பட்டதால் 2015 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. வெறும் 5.1 சதவீத வாக்குகளை மட்டுமே தேமுதிக அப்போது பெற்றது. இருந்தாலும் அது திருந்தவில்லை, சுதாரிக்கவில்லை.
இப்போது 2016 சட்டசபைத் தேர்தலில மக்கள் தேமுதிகவை தூக்கிப் போட்டு விட்டார்கள். வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது தேமுதிக. இது மிகப் பெரிய சரிவாகும். மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய தேமுதிகவின் நிலை இபபோது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறியுள்ளது.