2016 சட்டசபைத் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறுமா தேமுதிக... ?
சென்னை: 2016 சட்டசபைத் தேர்தலில் தேமுதிக.,வை தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் பெரும்பாலான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக. அதிமுகவுக்கு பெரிய சவாலாக அமையாவிட்டாலும், அது திமுகவுடன் கூட்டணி சேராவிட்டால், திமுக.,வின் ஒட்டு வங்கியில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தக்கூடும் என்றே அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சென்ற மாதம் வரை தனித்தே நிற்கப்போகிறோம் என்று சொல்லி வந்த பல கட்சிகள், அது வேளைக்கு ஆகாது என்று தெரிந்தோ என்னவோ தற்போது கூட்டணிக்கான வேலைகளை தொடங்கி இருக்கின்றன.
தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இணையப் போகும் கட்சிகள் யார் என்பது குறித்தும், புதிதாக உருவாகியுள்ள 3வது அணியான மக்கள் நல கூட்டு இயக்கத்தில் மேலும் இணையப்போகிறவர் யார், அந்த இயக்கத்தை விட்டு வெளியேறப் போகிறவர் யார், அதற்கு தலைமை தாங்கப் போவது யார் என்பது குறித்தும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் மக்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில் தேமுதிக.வை மையமாக வைத்தே 2016 சட்டசபைத் தேர்தலின் வெற்றி அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முக்கிய சக்தி தேமுதிக
2016 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக தேமுதிக உள்ளது. தமிழகத்தில் தே.மு.தி.க., 3-வது பெரிய கட்சியாக இருப்பதால் 5 முதல் 10 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பரவலாக ஓட்டுகள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே விஜயகாந்த்தை தங்கள் வசம் இழுக்க பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மவுனம் கலைத்த விஜயகாந்த்
இந்நிலையில் நீண்ட நாட்களாக கூட்டணி குறித்து மவுனம் காத்து வந்த விஜயகாந்த், அண்மையில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார். தமிழகத்தில் வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளில் தே.மு.தி.க. முதலிடத்தில் உள்ளது. இதனால் 2016 சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்றார். இதன் மூலம் தேமுதிகவின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக
அதிமுக.,வை பொருத்தவரை முதல்வர் ஜெயலலிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பே அதிரடி திட்டத்தை வகுத்துள்ளார். ஒரு வாக்குச் சாவடிக்கு ஒருவர் வீதம் 64 ஆயிரத்து 94 வாக்குச் சாவடிக்கும் வாக்கு சேகரிப்பாளர்களை நியமித்துள்ளார். இவர்கள் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் " நமக்கு நாமே" விடியல் மீட்புப் பயணம் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
மக்கள் நல கூட்டு இயக்கம்
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மற்றும் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கம் என்ற புதிய அணியை உருவாக்கியது. இதனை பலப்படுத்துவதற்கான முயற்சியில் வைகோ, திருமாவளவன், மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அணியிலிருந்து மனித நேய மக்கள் கட்சி விலகியதால் கூட்டணியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
பாமக
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக பலமாதங்களுக்கு முன்பே அறிவித்த பாமக, சென்ற மாதம் வரை தனித்து போட்டியிடுவதாகக் கூறியது. திடீரென திமுக, அதிமுகவைத் தவிர, அன்புமணியின் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் ஏற்கத் தயார் என்று டாக்டர். ராமதாஸ் அறிவித்தார்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், கட்சியினரிடையே உள்ள கோஷ்டி பூசலை சமாளிப்பதிலேயே அவருக்கு நேரம் சரியாக உள்ளது.
மொத்தத்தில் விஜயகாந்த் சேரும் இடமே பலம் பெறலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.