காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம்... திமுக, தோழமைக்கட்சிகள் மனிதசங்கிலி!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமைகக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
Recommended Video
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக மற்றும் அதன் 9 தோழமைக்கட்சிகள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் கைகளை கோர்த்தபடி அமைதி வழியில் கட்சி சார்பின்றி பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற வழி செய்யும் விதமாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பில் விளக்கம் கேட்டு காவிரி வாரியத்தை அமைக்காமல் கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது.
மே 3ம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது, இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வரும் திமுக, இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியது. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மற்றும் 9 தோழமைக்கட்சிகள் இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தன.
சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் கைகளை கோர்த்துக்கொண்டு மனிதசங்கிலியாக நின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஜெ. அன்பழகன் எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமானோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டி.ஆர்.பாலு, எல்.கணேசன் உள்ளிட்டோர் இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று வைகோ தெரிவித்தார்.
சேலம் அண்ணா சிலையில் இருந்து ஐந்து ரோடு வழியாக 5 கி.மீ தூரத்திற்கு திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சியினர் மனிதசங்கிலியாக நின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த மனிதசங்கிலி போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினர் பங்கேற்றனர்.