ஐஐடி மாணவர் சூரஜை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின் - வீடியோ
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை ஐஐடியில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜை மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: சென்னை ஐஐடியில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சூரஜ் மாட்டுக்கறி விவகாரத்தில் தாக்கப்பட்டார். அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மத்திய அரசு பசுவதைத் தடுப்பு சட்டம் கொண்டு வந்தது. அதில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ அல்லது வாங்கவோ கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனால் மாட்டிறைச்சியை விற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தடை சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் திருவிழாவை சூரஜ் என்ற மாணவர் ஒருங்கிணைத்துள்ளார். அதனால் அவரை ஏவிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகத் தாக்கியதில் அவருடைய கண் பாதிப்படைந்தது. அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்று வரும் சூரஜை, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். மு.க.ஸ்டாலின் தன்னை வந்து சந்தித்ததில் சூரஜ் நம்பிக்கை அடைந்துள்ளார்.