ஹிந்தியை அலுவல் மொழியாக்க முயன்றால் பெரும் போராட்டம்.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
திருவண்ணாமலை: ஹிந்தியை அலுவல் மொழியாக்க மத்திய அரசு முயற்சி செய்தால் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.
'நீர்நிலைகளை காப்போம்' என்ற திட்டத்தின் கீழ் குளம் மற்றும் ஏரிகளை திமுகவினர் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர். இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தூர்வாரப்பட்ட 18 குளங்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று ஒப்படைத்தார்.
முதலில், தூர்வாரப்பட்டு, பராமரிப்பு செய்யப்பட்ட எல்லை பிள்ளையார் குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இதன்பிறகு ராகேவேந்தர் நகரில் தூர்வாரப்பட்ட மரநாயக்கன் குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஸ்டாலின் வழங்கினார். அதேபோல மரக் கன்றுகளை நட்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பூ பிச்சாண்டி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிருபர்களிடம் அப்போது ஸ்டாலின் கூறியதாவது:
ஹிந்தியை அலுவல் மொழியாக கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அப்படி அலுவல் மொழியாக கொண்டுவந்தால் மாபெரும் போராட்டம் திமுக சார்பில் முன்னெடுக்கப்படும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோரி வலியுறுத்தி வருகிறோம். சிறையில் சசிகலா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக
வெளியான விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சங்களிலும் தமிழகம் தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதை சரி செய்ய மாநில அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.