கச்சத்தீவு விஷயத்தில் திமுகவும், அதிமுகவும் மோதிக் கொள்வது மோசடி: திருமாவளவன்
சென்னை: கச்சத்தீவு விஷயத்தில், திமுகவும், அதிமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்வது மோசடியான செயலாகும். இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசிடம் இணைந்து வலியுறுத்தியிருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் மேலும் கூறுகையில், கச்சத்தீவினை திமுக தலைவர் கருணாநிதி, அவர் முதல்வராக இருந்த போது இலங்கைக்கு தாரை வார்த்தார் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார்.
கச்சத்தீவை இலங்கைக்கு அளித்த போது, முதல்வராக இருந்த கருணாநிதி, அதற்காக பெரியளவில் எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு மாநில முதல்வருக்கு நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டுக்கு அளிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, முதல்வரின் அனுமதியின்றியும், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலும் தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார்.
திமுகவை ஆதரிப்பதற்காக நான் இதை சொல்லவில்லை. கச்சத்தீவு பிரச்சினையில் திமுகவை அதிமுக குறை சொல்வதும். அதிமுக இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக குற்றஞ்சாட்டுவதும் மிகப்பெரிய மோசடியாகும். ஏனென்றால், இவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசிடம் இணைந்து வலியுறுத்தியிருக்க வேண்டும். அதற்கான துணிச்சல் இல்லாததை திமுக, அதிமுகவின் செயல்கள் காட்டுகின்றன என்று திருமாவளவன் கூறினார்.