வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போக செய்வதா? - சென்னையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்
Recommended Video
சென்னை: எஸ்.சி.எஸ்.டி சட்டத்தை வன் கொடுமை தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதைக் கண்டித்து சென்னையில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா, சுப. பாண்டியன், ராமசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.க. துணைத் தலைவர் கலி. பூங்குன்றம் ஆகியோரும் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து பேசினர்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் காசிநாத் மகாஜன் என்ற ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், தன்மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்திருந்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 20-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
அதாவது, தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் ஒருவர் மீது கொடுக்கப்படும் புகாரின் பேரில் அவரை உடனடியாக கைது செய்து விடக்கூடாது என்றும், டி.எஸ்.பி. தலைமையில் பூர்வாங்க விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே மேல் அதிகாரி அனுமதியுடன் கைதுசெய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தலித் பிரிவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பு வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் என குற்றம் சாட்டிய தலித் பிரிவினர், தீர்ப்பை எதிர்த்து கடந்த 2-ந்தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, பீகார், பஞ்சாப், அரியானா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், தலித் அமைப்புகளின் கூட்டமைப்பும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்ததுடன், தீர்ப்புக்கு இடைக்கால தடையும் கோரினர். ஆனால் இடைக்காலத்தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இதனிடையே தாழ்த்தப்பட்டோர்/ மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற்படுத்துவதுடன்; குற்றம் செய்ய நினைப்பவர்களுக்குச் சாதகமான வகையில் அமைந்துள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப் போகும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்நிலையில், மத்திய அரசு இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாமல், அக்கறையின்றி நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்றும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
உடனடியாக மத்திய அரசு இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த்தப்பட்ட/ மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.