திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி தொகுதிகள்
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் தேமுதிக கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு தொகுதியிலும், பார்த்திபன் மேட்டூர் தொகுதியிலும், சி.எச். சேகர் கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சந்திரகுமார் தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் தேமுதிவில் கலகக்குரல் வெடித்தது. மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததற்கு, தேமுதிக கொள்கை பரப்பு செயலராகச் செயல்பட்டு வந்த வி.சி.சந்திரகுமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை கட்சியிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீக்கினார்.
இதையடுத்து "மக்கள் தேமுதிக' எனும் புதிய அமைப்பை உருவாக்குவதாக சந்திரகுமார் அறிவித்தார். பின்னர் நேற்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார், தேமுதிகவில் இருந்து விலகிய பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் சந்திரகுமார் உள்ளிட்டோர் இன்று மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக கட்சிக்கு ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. 3 தொகுதிகளிலும் மக்கள் தேமுதிக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு தொகுதியிலும், பார்த்திபன் மேட்டூர் தொகுதியிலும், சி.எச். சேகர் கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என அந்த கட்சியின் தலைவர் சந்திரகுமார் அறிவித்தார்.
ஏற்கனவே இவர்கள் மூவரும் தேமுதிக சார்பில் 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இதே தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.