ஹைட்ரோ கார்பன்.. 'கீழே விழுந்த குழந்தைகள் அல்ல மக்கள்'.. திமுக அதிமுகவுக்கு முக்கிய கேள்விகள்!
சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுத்தால் வாழ்வாதாரமே பாதிக்கும் என்று மக்கள் போராடி வரும் இந்த சூழலில், இதுதொடர்பான ஆரம்ப கட்ட ஆய்வுக்கு திமுக அரசு அனுமதி கொடுத்தது ஏன்? ஆய்வுக்கு முன்பே திமுகவுக்கு திட்டத்தின் கொடூரம் தெரியாதா என்ற கேள்வியும், அதிமுக இன்றுவரை இதுபற்றிவாய் திறக்காமல் இருந்தது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.
சிறுபிள்ளைகளாக நாம் இருக்கும் போது காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய் வளங்கள் நிறைந்து இருப்பதாக படித்து இருப்போம். இவை ஹைட்ரோ கார்பன் மற்றும் மீதேன் வாயுக்களாக இருப்பதாக இன்றைய நவீன சோதனைகள் மூலம் கண்டறிந்தனர். கருப்பு தங்கமான இதனை எடுப்பதுபற்றி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஆய்வு நடத்த திமுக அரசிடம் அனுமதி கேட்டது.
இதைடுத்து ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எடுப்பது தொடர்பான ஆய்வுக்கு திமுக ஆட்சியில் இருந்த போது அனுமதி அளிக்கப்பட்டது. காங்கிரசுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக, இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஒஎன்ஜிசி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் காவிரி டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக நெடுவாசல், கதிராமங்கலம் என பல இடங்களில் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசு அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என தமிழக அரசு இன்று சட்டசபையிலேயே அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சி.வி. சண்முகம் சட்டசபையில் கூறுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது திமுக ஆட்சியில் தான் என்றார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு ஒரு காலத்திலும் அனுமதி அளிக்காது என அமைச்சர் சி.வி. சண்முகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஆய்வு நடத்த அனுமதி
திமுகவுக்கு ஒரு கேள்வி என்னவென்றால், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படும் என்று இன்று சொல்லும் திமுக, ஆட்சியில் இருந்த போது இந்த திட்டத்திற்கு ஆய்வு நடத்த அனுமதி அளித்தது ஏன் என்று கேள்வி எழுகிறது. அப்போதே காவிரி டெல்டா பாலைவனம் ஆகும் என்று தெரியாதா.
வாய் திறக்காதது ஏன்
திமுக அனுமதி அளித்ததை தாங்கள் தான் ரத்து செய்ததாக கூறும் அதிமுக அரசுக்கு ஒரு கேள்வி, மத்திய அரசு 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து ஆய்வு நடத்த பாஜக அரசு தேர்தல் முடிந்த பின்னர் தான் அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கிடையாது என்றால், இதுபற்றி கண்டனமோ அல்லது எதிர்ப்போ தெரிவித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்?
மாறி மாறி குற்றம்சாட்டுகிறார்கள்
மக்கள் இந்த அளவுக்கு கொந்தளிப்பார்கள். மக்கள் வாழ்வாதாரம் பறிபோய் விடும் பயப்படுவார்கள் என்பதை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஆரம்பத்திலேயே உணராதது ஏன்? கீழே விழுந்த குழந்தை போல் வலியில் அழும் தமிழக மக்களை யார்ரா அடித்தது உன்னை என்று .. ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி பழி சொல்லி குற்றம்சாட்டுவது ஏன் என்பது தான் தாழ்மையான கேள்வி.