தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கீதா ஜீவன் நியமனம்! அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் பதவி
தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்களை திமுக இன்று அறிவித்துள்ளது.
சென்னை: தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அனிதா ராதாகிருஷ்ணனனும் வடக்கு மாவட்டச் செயலாளராக கீதாஜூவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியசாமி. சுமார் 30 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருந்த பெரியசாமி, கடந்த 26ம் தேதி சென்னையில் காலமானார். இதனையடுத்து புதிய மாவட்ட செயலாளர் யார் என கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையிளல் இன்று புதிய மாவட்ட செயலாளர்களை திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிடுள்ள அறிவிப்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக கீதா ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே போன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தெற்கு மாவட்ட எல்லைக்குள் இருந்த தூத்துக்குடியை தற்போது வடக்கு மாவட்ட நிர்வாகத்தோடு திமுக இணைத்துள்ளது. அதாவது தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை வடக்கு மாவட்டம் என்றும், திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம், ஒட்டபிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை தெற்கு மாவட்டமாகவும் நிர்வாக ரீதியாக திமுக பிரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்ட அ.சுப்பிரமணி தலைமைக் கழகத்தால் திமுக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.