தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் : திமுக அறிவிப்பு
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து திமுக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பல அரசியல் கட்சியனரும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை கையிலெடுத்துள்ளனர். அதன்படி திமுக சார்பிலும் துப்பாக்கி சூட்டினை கண்டித்து பல ஆர்ப்பட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவத்தை கண்டித்து, நேற்றைய தினம் கண்டன அறிக்கை வெளியிட்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதைபோல், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது யார்? என்றும், கூட்டத்தினரைக் கலைக்க தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன்? என்றும் திமுக செயல் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனிடையே சென்னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுக மீனவர் அணியினர் இன்று கலங்கரை விளக்கம் அருகே தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வரும் 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
சென்னையில் அன்றைய தினத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.