வாக்காளர் பட்டியலில் திமுகவினர் பெயரை மட்டும் நீக்குறாங்க: தலைமைச் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து திமுக தொண்டர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தீப் சக்சேனாவை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வழக்கறிஞர்கள் அணி செயலாளர் கிரிராஜன், இணைச் செயலாளர் இ.பரந்தாமன் ஆகியோர் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அதில், வாக்காளர் பட்டியலை பிழையின்றி செம்மைப்படுத்தி, அதில் வாக்காளர்களின் ஆதார் உள்ளிட்ட தகவல்களை இணைத்து உறுதி செய்யும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் இந்தப் பணிகளுக்காக வருவாய்த் துறை மற்றும் பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் பணியை துஷ்பிரயோகம் செய்து அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து கொண்டு அந்தக் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.
இதுபற்றி எங்கள் கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் மக்களின் பெயர்களை காரணமே இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் அடுத்ததாக வரும் சட்டசபைத் தேர்தலில் ஓட்டுபோடுவதில் இருந்து அவர்களைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு வாக்குச்சாவடிக்கு தி.மு.க.வுக்கு ஓட்டுபோடும் 100 பேரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியும், அ.தி.மு.க.வுக்கு ஆதரவானவர்களை ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் சேர்க்கவும் எண்ணியுள்ளனர்.
இந்த ஒழுங்கீனங்களை அனுமதித்தால் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் போலியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுவிடுவார்கள். எனவே முன்னதாகவே இது தடுக்கப்பட வேண்டும்.இதுசம்பந்தமான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அதை உங்களிடம் சமர்ப்பிப்போம்.
இந்த வகையில் சட்டவிரோதமாக செயல்படும் அலுவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற எந்தப் புகாரும் கூறப்படாத அளவுக்கு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுபோல் வாக்காளர்களின் தகவலை இணைக்கும் திட்டத்திற்காக வாக்குச்சாவடி அளவில் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய தகவல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அலுவலக விளம்பரப் பலகையில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.