டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுகவினருக்குத் தடை: தலைமை உத்தரவினால் உ.பிக்கள் தவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணங்களைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விவாதம் நடத்தப்படுவதால், முன்னணி நிர்வாகிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கக் கூடாது' என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது திமுக தலைமை.
இந்த உத்தரவினால் அதிர்ச்சியடைந்துள்ள நிர்வாகிகள் நமது தரப்பு நியாயத்தை எப்படி தெரிவிப்பது என்று கேட்டு வருகின்றனர்.
புதிய தலைமுறையின் நேர்பட பேசு, தந்தி டிவியின் ஆயுத எழுத்து என பல தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் தி.மு.கவின் வழக்கறிஞர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் தினம்தோறும் பங்கெடுத்து கட்சி மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு எதிராக, கொந்தளிப்பார்கள்.
சில நேரங்களில் விவாதங்களில் அனல் பறக்கும், கார சார விவாதங்களில் கை கலப்புகள் வரை கூட சென்றுள்ளது. சிறப்பு விருந்தினராக வந்தவர்கள் மைக்கை கழற்றி போட்டு விட்டு பாதியிலேயே வெளியேறிய சம்பவங்களும் கூட நிகழ்ந்துள்ளது.
திமுக, காங்கிரஸ் கட்சி சார்பில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட பலருக்கு வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், கூட விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கடமையாற்றி வந்தனர். இந்நிலையில், டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வெளியிட்டுள்ள அறிக்கையில், விவாதங்களுக்கு நம்மை அழைக்கிறார்கள். அங்கு யார் பேசினாலும், நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் நம் மீதே அவதூறு செய்கிறார்கள். தி.மு.கவை குற்றம் சொல்வதிலேயே நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை எல்லாம் நேற்று நடந்தது போல பேசுகிறார்கள். இதனால் கட்சிக்குக் கெட்ட பெயர் வருகிறது. நாம் செல்வதால் மட்டும்தான், தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறுகிறது. இனி கழகத்தின் சார்பில் விவாதங்களில் யாரும் பங்கெடுக்கக் கூடாது' என கூறியுள்ளார்.
விவாதங்களில் தி.மு.க சார்பில் பிரதிநிதிகள் இல்லாவிட்டால், எங்கள் மீதான களங்கத்தை எப்படித் துடைக்க முடியும்? என்று கேட்கின்றனர் திமுக நிர்வாகிகள். தொலைக்காட்சி விவாதங்களில் பேசினால்தான், மக்கள் நம்மீது நம்பிக்கை வைப்பார்கள். ஒரேயடியாக, விவாதங்களுக்கு தடை போடுவது சரியா?" எனக் கொந்தளிக்கின்றனர் உடன் பிறப்புகள்.
திமுகவினர் பங்கேற்காத டிவி விவாத நிகழ்ச்சிகள் எல்லாம் கார சாரம் இல்லாத பத்திய சாப்பாடு போல அல்லவா இருக்கும்.