ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா: தேர்தல் அதிகாரியிடம் ஸ்டாலின், தமிழிசை புகார்
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ராவிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா மும்முரமாக நடந்து வருவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ராவிடம் திமுக, பாஜக புகார் மனுக்களை கொடுத்துள்ளன.
ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நேற்று முதல் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. ஆளும் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.6000 வரை விநியோகம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதுதொடர்பாக காவல் நிலையங்களும் புகார்களை பெற்று கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் ஆர்.கே.நகரில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.60 கோடி வரை பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக, பாஜக புகார்
இதுதொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் இன்று காலை அரசியல் கட்சியினருடன் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் திமுகவும் பாஜகவும் புகார் அளித்தன.
பணப்பட்டுவாடா
திமுக சார்பில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மூத்த தலைவர் துரைமுருகன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். அதேபோல் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவித்தார்.
தமிழிசை பேட்டி
இதன் பின்னர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறுகையில், ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. தேர்தலை நியாயமாக நடத்தமுடியாவிட்டால் தேர்தலை நடத்தி பயன் இல்லை.
குக்கர் விநியோகம்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் விநியோகம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கைகள் செல்கின்றன. டிடிவி தினகரன் அணியினர் குக்கர் சின்னத்தை வீடு வீடாக விநியோகம் செய்துள்ளனர். தேர்தல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும் என்றார் தமிழிசை.