மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுங்கள்.. திமுகவினரின் கண்ணீர் போராட்டம்
Recommended Video
சென்னை: மெரினாவில் இடம் இல்லை என்பதற்காக போராட்டத்தில் இறங்கியுள்ளனர் திமுகவினர். ஆனால் எந்தவித வன்முறையிலும் இறங்காமல் இந்த போராட்டத்தை திமுகவினர் நடத்தி வருவது மதிக்கத்தக்கதாக உள்ளது.
தொண்டர்கள் அமைதியும், கண்ணியமும் காக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று மாலை தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து கருணாநிதி மறைவு செய்தி வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த தொண்டர்கள், தொண்டை கிழிய கத்தி கண்ணீர் வடித்தார்களே தவிர எந்தவித அசம்பாவிதத்திலும் இறங்கவில்லை. வன்முறை முயற்சியிலும் ஈடுபடவில்லை. தங்கள் துக்கத்தையும், சோகத்தையும் கண்ணீர் வடிவிலேயே தந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனை தொடர்ந்து கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 5 முறை தமிழகத்தை ஆண்டவரும், 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் மிளிர்ந்தவரும், போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் வென்றவருமான கருணாநிதிக்கு மெரினாவில் இடம் இல்லை என்று சொல்லிவிட்டதால் திமுக தரப்பில் மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதனால் ஆத்திரமும், கோபமும் அடைந்த திமுக தொண்டர்கள், மெரினாவில் தங்கள் தலைவருக்கு இடம் வேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்தனர். ஆனால் இந்த போராட்டம் வன்முறையை தாங்கி வரவில்லை. கைகலப்போ, தாக்குதலையோ தொடுத்து நடைபெறவில்லை.
மாறாக, தங்கள் செயல்தலைவரின் வார்த்தைக்கு மதிப்பளித்து, கண்ணீருடன் இந்த போராட்டத்தை தொண்டர்கள் பதிவு செய்து வருவது இந்த பரபரப்பு நிறைந்த நேரத்தில் கவனிக்கத்தக்கதாகவே உள்ளது.