பிரியாணி தகராறு.. கூட்டாளிகளுடன் ஹோட்டலுக்குள் புகுந்து கேஷியரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி
Recommended Video
சென்னை: திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ், சென்னை, விருகம்பாக்கத்திலுள்ள ஹோட்டலுக்குள் கூட்டாளிகளுடன் புகுந்து, ஊழியர்களை சரமாரியாக குத்தி காயப்படுத்தும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
கடந்த 28ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹோட்டல் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஷட்டரை திறக்கச் சொல்லி, உள்ளே பத்து பதினைந்து கூட்டாளிகளோடு புகுந்த யுவராஜ், சரமாரியாக கேஷியர் முகத்தில் குத்துவிடுகிறார்.
தடுக்க முற்பட்ட கடை ஊழியர்கள் முகத்திலும் குத்துகிறார். அவர் கூட்டாளிகளும் குத்துகிறார்கள்.
சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் இப்போது வைரலாகியுள்ளன. கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வன் இதுபற்றி போலீசில் புகார் அளித்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
உரிமையாளர் குற்றச்சாட்டு
இதுபற்றி தமிழ்ச் செல்வன் கூறுகையில், திமுகவை சேர்ந்த அந்த தம்பியும் அவர் கூட்டாளிகளும் தாக்கியதில், எனது கடை கேஷியருக்கு மூக்கில், தலையில் பல தையல்கள் போடப்பட்டுள்ளன. வியாபாரிகள் சங்கம் இந்த சம்பவத்திற்கு எதிராக எங்களுடன், இணைந்துள்ளது. போலீஸ் துணை கமிஷனர், இன்ஸ்பெக்டரும், தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். கட்சி பிரமுகர்களிடம் முறையிட்டபோது, அவர்களும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. கட்சி ரீதியாக தக்க நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர் என்றார்.
கடை ஊழியர் குமுறல்
கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், கருணாநிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பயன்படுத்திக்கொண்டு, இதுபோன்ற கலாட்டாவில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு ஹோட்டல் பூட்டப்பட்ட பிறகு அதை திறக்கச் சொல்லி பிரியாணி கேட்டனர். பிரியாணி இல்லை என்றபோது தாக்கினர். எப்போதுமே ஸ்கார்பியோ காரில் நண்பர்களோடு வருவதும், காரை ஹோட்டல் முன்னால் நிறுத்தி பிறருக்கு தொல்லை கொடுப்பதும், அதை நகர்த்தி விட சொன்னால் தகராறு செய்வதும் இவர்கள் வாடிக்கைதான்.
பாக்சர் போல குத்துகிறார்
"நான் லோக்கல், நான் லோக்கல்" என கூறியபடி கெத்தோடுதான் எப்போதும் வருவார். கையில் போட்டிருந்த வளையம், பிரேஸ்லெட் போன்றவற்றை வைத்துதான் எங்களை தாக்கினர். இவ்வாறு அந்த ஊழியர் தெரிவித்தார். பாக்சரை போல துள்ளி துள்ளி குதித்தபடி கேஷியர் முகத்தில் திமுக நிர்வாகி குத்தும் காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.