தலைவரை பார்க்க சென்னை போக முடியலையே.. மனம் உடைந்து விஷம் குடித்த தர்மபுரி திமுக தொண்டர்
கருணாநிதியை பார்க்க முடியாமல் தருமபுரி தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
தருமபுரி: பெரிதும் நேசித்து வரும் திமுக தலைவரை பார்க்க சென்னை செல்ல தன் குடும்பத்தினர் அனுமதி மறுத்ததால் தருமபுரியை சேர்ந்த தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் இப்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
திமுக தலைவருக்கு மருத்துவர் குழு தன் கண்காணிப்பிலேயே வைத்து சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் மாநிலங்களின் பல்வேறு பகுதியில் தீவிர தொண்டர்கள் அதிர்ச்சியினாலும், துக்கத்தினாலும் உயிரிழந்து வருகின்றனர்.
ஸ்டாலின் உருக்கம்
கருணாநிதியின் உடல்நிலை பாதித்த சம்பவம் பாதிக்கப்பட்டு, ஒரு சிலர் தீக்குளிக்கவும் முயற்சித்து வருகின்றனர். இதனை அறிந்த அக்கட்சியின் செயல்தலைவரும், தொண்டர்கள் யாரும் தங்களுடைய விலைமதிக்க முடியாத உயிரை இழக்க வேண்டாம் என உருக்கத்துடன் வேண்டி அறிக்கையும் விடுத்துள்ளார்.
தீவிர விசுவாசி
இந்நிலையில் தருமபுரியிலும் ஒரு தீவிர தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதியமான்கோட்டையை சேர்ந்தவ கணபதி என்பவர் ஒரு கட்டிட தொழிலாளி. வயது 55. திருமணமாகி மனைவி, மகன்கள், மகள் உள்ளனர். திமுகவின் மேல் அப்படி ஒரு விசுவாசம் இவருக்கு. எங்கு திமுக சார்பாக கூட்டங்கள் நடந்தாலும் அங்கு ஆஜராகிவிடுவார். அதேபோல, கட்சி சார்பாக எங்கு போராட்டம் நடைபெற்றாலும் முதல் ஆளாக கலந்து கொள்வதுடன் கைதாகி சிறைக்கும் சென்றுவிட்டு வருவார்.
நேரில் பார்த்தே ஆகணும்
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை அறிந்ததிலிருந்து கணபதி மனம் ஒடிந்து போனார். தினமும் கருணாநிதி உடல்நலம் மற்றும் சிகிச்சை குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வந்துள்ளார். தற்போது கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனையே சொன்னாலும், சென்னை சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வந்துவிட்டால்தான் நிம்மதி என்று முடிவுக்கு வந்துள்ளார்.
ஆபத்தான கட்டம்
அதனால் வீட்டில் உள்ளவர்களிடம், சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் இன்னும் கவலை அடைந்த கணபதி, நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி குடித்துவிட்டார். பின்னர் மயங்கி கீழே விழுந்த அவரை மீட்ட குடும்பத்தினர் தருமபுரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு கணபதி அபாய கட்டத்தில் உள்ளதால் அவருக்கு 48 மணி நேரம் குறிக்கப்பட்டுள்ளது. தொண்டர் இப்படி தற்கொலையில் ஈடுபட்டு உயிருக்கு போராடி வருவது குடும்பத்தாரிடமும், மாவட்ட திமுக தொண்டர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.