ஆர்கே நகரில் திமுகவினருக்கு அரிவாள் வெட்டு.. பணப்பட்டுவாடாவை தடுத்ததால் தினகரன் கோஷ்டி வெறியாட்டம்
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடாவை தட்டிக் கேட்ட திமுகவினரை அரிவாளால் வெட்டி டிடிவி தினகரன் கோஷ்டி வெறியாட்டம் நடத்தியுள்ளது. படுகாயம் அடைந்த அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர
சென்னை: ஆர்.கே நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்பவர்களை தட்டிக் கேட்ட திமுகவினரை அரிவாளால் வெட்டி தினகரன் கோஷ்டியினர் வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுக இரண்டு அணியாக பிரிந்து தேர்தலை சந்தித்து வருகிறது. அவர்களுடைய கட்சியின் பெயர், சின்னம் என எதனையும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால் ஓட்டுக்கு பணம் தருவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் இந்த வேலையில் அதிகம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணப்பட்டுவாடா செய்த புகாரில் ஏற்கனவே 3 பேர் தினகரன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் விநியோகம்
இந்நிலையில், நேதாஜி நகர் 4வது தெருவில் பணம் விநியோகம் செய்துக் கொண்டிருந்தவர்களை திமுகவினர் மடக்கிப் பிடித்துள்ளனர். பணம் பட்டுவாடா செய்தவரிடம் இருந்து சுமார் 65 ரூபாய் பணம், யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பெயர் பட்டியல், வாக்காளர் பட்டியல் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த வேலையை 3 நாட்களாக தான் செய்து வருவதாகவும் பணம் கொடுத்தவர் ஒப்புக் கொண்டார்.
அரிவாள் வெட்டு
பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்திய திமுகவினர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்களை வழி மறித்த தினகரனின் அடியாட்கள் அவர்களை அரிவாளால் வெட்டி வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர். இதில் திமுகவைச் சேர்ந்த பார்த்தசாரதி, ஷேக் மற்றும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதனால் படுகாயம் அடைந்த மூவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்த மூவரையும் சேகர் பாபு உள்ளிட்ட திமுக தலைவர்கள் இரவு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
ஸ்டாலின் ஆறுதல்
இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தினகரன் ஆட்கள் தொடர்ந்து இதுபோன்ற வேலைகளில் செய்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தார்.