டாக்டர்கள் என்ன சொன்னாலும் சரி, கருணாநிதி நிச்சயம் நலம் பெறுவார்: தொண்டர்கள் நம்பிக்கை
Recommended Video
சென்னை: கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என்று திமுக தொண்டர்கள் நம்புகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்றுடன் தொடர்ந்து 11வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை 24 மணிநேரம் கழித்தே சொல்ல முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து திமுக தொண்டர்கள் கவலையும், பதட்டமும் அடைந்தனர்.
மருத்துவமனை முன்பு கூடிய தொண்டர்கள் பலர் கதறி அழத் துவங்கிவிட்டனர். தலைவர் நிச்சயம் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள்.
நீ எழுந்து வா தலைவா என்று தொண்டர்கள் கோஷமிட்டதை காண முடிந்தது. நேரம் செல்ல செல்ல மருத்துவமனை பகுதியில் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்ததால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மருத்துவமனை என்ன சொன்னாலும் தலைவர் நிச்சயம் நலம் பெற்று வீடு திரும்புவார் என்கிறார்கள் தொண்டர்கள்.