ஆம்பூர் தொகுதியை ம.ம.க.வுக்கு ஒதுக்கியதற்கு கண்டனம்- திமுகவினர் ஆர்ப்பாட்டம்
வேலூர்: ஆம்பூர் சட்டசபை தொகுதியை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பின்னர் உளுந்தூர்பேட்டை தொகுதியை நேற்று திமுகவிடமே மனித நேய மக்கள் கட்சி திருப்பி கொடுத்தது.
இந்த நிலையில் ஆம்பூர் தொகுதியையும் மனித நேய மக்கள் கட்சியிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ஆம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளரையே நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே அணைக்கட்டு, பாளையங்கோட்டை என பல தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்பூரில் கூட்டணிக் கட்சியினருடனும் திமுகவினர் மல்லுக்கட்ட தொடங்கியிருப்பது திமுக தலைமையை கவலை அடைய வைத்துள்ளது.