கோடநாட்டில் பள்ளி மற்றும் ரேஷன் கடையை திறக்க கோரி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நீலகிரி: கோடநாடு எஸ்டேட்டில் மூடப்பட்ட ஆரம்பப்பள்ளியை திறக்க கோரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகிலுள்ள கோடநாடு பகுதியில் இயங்கி வந்த சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளி மூடப்பட்டதற்கும், அங்கு செயல்பட்டு வந்த ரேஷன் கடை மாற்றப்பட்டதை கண்டித்தும், நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோடநாடு பகுதியில் இருந்து சி.எஸ்.ஐ பள்ளி மூடப்பட்டதற்கும், ரேஷன் கடை மாற்றப்பட்டதை கண்டித்தும் கோஷம் எழுப்பட்டது. மேலும், மீண்டும் அதே இடத்தில் பள்ளியும், ரேஷன் கடையும் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் முஸ்தபா நன்றி கூறினார். கோத்தகிரியில் திரண்டிருந்த தி.மு.கவினர் கோடநாடு எஸ்டேட் கேட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த கூடும் என்பதற்காக அ.தி.மு.கவினர் அங்கு குவிந்தனர். இதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.