உள்ளாட்சித் தேர்தல் திமுகவும் களமிறங்கியது... செப். 19 முதல் விருப்ப மனு தரலாம்!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுகவில் வரும் 19-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அக்கட்சிப் பொதுச்செயலர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தமிழக அரசு தயராகி வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அக்டோபர் 17 மற்றும் 19-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என்றும் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன. அதிமுகவில் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. இது 22-ந் தேதிவரை பெறப்படும் என முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
தற்போது திமுகவும் விருப்ப மனுக்களை பெறுவது குறித்து அறிவித்துள்ளது. திமுக பொதுச்செயலர் இன்று அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், வரும் 19-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என கூறியுள்ளார்.