திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று இல்லை.. வதந்திகளை மறுத்தார் ஸ்டாலின்
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எதுவும் இன்று கூட்டப்படவில்லை என்று அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே இன்று மாலைக்குள் சென்னை வருமாறு கட்சி கொறடா சக்ரபாணி வாய்மொழியாக உத்தரவிட்டதாக பல்வேறு மீடியாக்களிலும் காலையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதிமுகவின் சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில், 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் ஆட்சியமைக்க வாய்ப்பு கோரியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடும்பட்சத்தில் தி.மு.க எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏக்களிடம் கேட்க முடிவு செய்து திமுக காய்நகர்த்துவதாக கூறப்பட்டது. ஆனால் இதை கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் மறுத்துள்ளார்.