தேர்தல் வழக்கு : கோர்ட்டில் சரணடைந்த ஏற்காடு திமுக வேட்பாளர் மாறனுக்கு ஜாமீன்
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் மாறன். மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணி குழு செயலாளரும் எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரோடு இணைந்து மாறன் ஏற்காடு மலை கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.வாழப்பாடி கிராம நிர்வாக அதிகாரி அய்யனார், தேர்தல் விதிமுறைகளை மீறி தி.மு.க. வேட்பாளர் மாறன் அதிக கார்களுடன் வாக்கு சேகரிக்க சென்றதாக வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சிவகுமார் இது குறித்து தி.மு.க. வேட்பாளர் மாறன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை மாறன் சேலம் எண் 6 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் தம்பிதுரை மூலம் சரண் அடைந்தார்.
நீதிமன்றத்தில் தரையில் அமர்ந்த வேட்பாளர்
இது பற்றி மாஜிஸ்திரேட் அம்பிகா விசாரணை நடத்தினார். தி.மு.க. வழக்கறிஞர்கள் திரளாக வந்து மாஜிஸ்திரேட்டிடம் மாறன் மீது போடப்பட்ட வழக்கு ஜாமீன் தரக்கூடிய வழக்கு தான். அதனால் உடனே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர். அதற்கு மாஜிஸ்திரேட் வழக்கை விசாரித்த பின்னர் தான் ஜாமீன் வழங்க முடியுமா என தெரிவிக்க முடியும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் மற்ற வழக்கு விசாரணைக்கு வந்தவர்களுடன் தரையில் அமர்ந்திருந்தார் மாறன். இதனால் நீதிமன்றத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரித்து மாறனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.