செயல்வீரர் கூட்டத்தையே மாநாடு போல நடத்திய திமுக வேட்பாளர்.. மிரண்டு போன பெருந்தலைகள்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றியது முதல் அந்தத் தொகுதியே பெரும் உற்சாகமாக காணப்படுகிறது. புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவ. வீ. மெய்யநாதன் போகும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடி வருவதை அந்தக் கட்சியினரே ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனராம்.
ஆலங்குடி தொகுதிக்கு முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் டாக்டர் சதீஷ். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு வார காலம் தொகுதியில் போராட்டம் நடந்தது. இதையடுத்து பணிந்து வந்த திமுக மேலிடம், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான சிவ. வீ. மெய்யநாதனை வேட்பாளராக அறிவித்தது.
மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்தவரான மெய்யநாதன் எம்.சி.ஏ. படித்தவர். தொகுதியில் நல்ல செல்வாக்குடன் உள்ளவர். அனைத்துத் தரப்பினரின் அன்பையும் பெற்றவராம். இதனால் அவருக்கு ஆதரவாக இப்போது பெரும் கூட்டமே ஓட்டு வேட்டையாடி வருகிறது.
போகும் இடமெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு களை கட்டுகிறதாம். இந்த நிலையில் அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவணத்தான் கோட்டை கிராமத்தில் நேற்று செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் பெரிய மாநாட்டுக்கு வருவது போல ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்தனர்.
இதைப் பார்த்து திமுகவினரே திணறிப் போய் விட்டனர், ஆச்சரியமடைந்தனர். கட்சி சீனியர்களும் கூட இவ்வளவு பெரிய கூட்டத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று பேசிக் கொண்டனர்.
வெற்றியும் இதே அளவுக்கு பிரமாண்டமாக இருக்குமா...?