சூடுபிடிக்கும் ஆர். கே. நகர் இடைத்தேர்தல்... 'மும்மூர்த்திகள்' மனு தாக்கல்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுகவின் மருதுகணேஷ், அதிமுகவின் மதுசூதனன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் போட்டியிடுவதற்காக மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் மாற்று வேட்பாளர் ஏ.கே.மணியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்றும், திங்கட்கிழமையும் நாட்கள் உள்ளன.
இது வரை 9 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த முறை இடைத்தேர்தலின் போதும் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முறை ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் ஆதரவாளரான மருதுகணேஷிற்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதிமுக கோட்டை
ஆர் கே நகர் தொகுதி 2001 முதல் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. 1996ம் ஆண்டில் திமுகவைச் சேர்ந்த சர்க்குணம் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதற்குப் பிறகு தொடர்ந்து 15 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் அதிமுகவே வெற்றி பெற்று வருகிறது. இதனிடையே அதே தொகுதியைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மருதுகணேஷிற்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பு மனு தாக்கல்
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் திமுகவைச் சேர்ந்த கே.பி.பி.சாமி, சேகர் பாபு மற்றும் மாற்று வேட்பாளர் ஏ.கே.மணி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
தினகரனும் மனு தாக்கல்
திமுக வேட்பாளரைத் தொடர்ந்து டிடிவி. தினகரன் தன்னுடைய ஆதரவாளர் வெற்றிவேல் உள்ளிட்டோருடன் சென்று மனு தாக்கல் செய்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆர்கே நகர் தொகுதியில் நிறைவேற்றுவதாக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
மதுசூதனன் மனு தாக்கல்
தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு சென்றவுடன் அதிமுகவின் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மதுசூதனனுடன் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். மதுசூதனன் வேட்புமனு தாக்கலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ அவரது அணியைச் சேர்ந்தவர்களோ பங்கேற்கவில்லை.