முதல் நாளே அவசரம் அவசரமாக வேட்பு மனுத் தாக்கல் செய்த திமுகவின் டிபிஎம் மைதீன்கான்!
நெல்லை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய முதல்நாளான இன்று பாளையங்கோட்டை வேட்பாளர் மைதீன்கான் உட்பட திமுக வேட்பாளர்கள் சிலர் தங்கள் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கடந்த 13ம் தேதி அக்கட்சி வெளியிட்டது. அதன்படி, பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான மைதீன்கான் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேட்பாளர் பட்டியல் வெளியான சிறிது நேரத்திலேயே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைதீன்கானின் கொடும்பாவியை எரித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து பாளை தொகுதி டிபிஎம் மைதீன்கானுக்கு கொடுக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் அவர் தொகுதி மக்களுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை என போராட்டக்காரர்கள் கூறினர்.
பின்னர் இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை தி.மு.க. அவைத்தலைவர் வேலு தலைமையில் திமுக நிர்வாகிகள் சுமார் 200 பேர், சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, மைதீன்கானை மாற்றக் கோரி மனு அளித்தனர்.
ஆனால், தொடர்ந்து மைதீன்கானை கட்சித் தலைமை மாற்றாததால் அவரது உருவபொம்மையை திருநெல்வேலி மாநகரின் வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தில் தூக்கில் போட்டு, தங்கள் எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், உருவபொம்மையை அகற்றினர். இதேபோல், மொபைல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தும், மொட்டையடித்தும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இவ்வாறு தொடர்ந்து மைதீன்கானை மாற்றக் கோரி போராட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய முதல்நாளான இன்று அவசர அவசரமாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் மைதீன்கான்.
கட்சித் தலைமை தன்னை மாற்றி விடாமல் இருக்க இவ்வாறு அவர் விரைந்து வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், கட்சித் தலைமையில் அனுமதியோடு தான் இன்று மைதீன்கான் வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமியும், சங்கரன்கோவில் வேட்பாளர் அன்புமணியும் தங்களது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.