அன்பு உடன் பிறப்புகளே.. நீண்ட இடைவெளிக்கு பின் தொண்டர்களுடன் கருணாநிதி உற்சாக சந்திப்பு!
நீண்ட காலத்துக்கு பின்னர் சென்னை கோபாலபுரத்தில் தொண்டர்களை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்தார்.
Recommended Video
சென்னை: சென்னை கோபாலபுர இல்லத்தில் தொண்டர்களை திமுக தலைவர் கருணாநிதி நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று சந்தித்தார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஓராண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதி, கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஆலோசனைகளை மட்டும் வழங்கி வந்தார். உடல்நலம் பாதிப்பால் அண்மையில் நடைபெற்ற முரசொலி பவள விழாவுக்கு கூட அவர் வரவில்லை.
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு தரிசனம் தந்தது கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
முரசொலி அலுவலகத்துக்கு...
அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டவுடன் கடந்த சில நாள்களுக்கு முன்னர் முரசொலி அலுவலகத்துக்கு சென்றிருந்தார். இந்நிலையில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கோபாலபுரத்துக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
வீட்டு வாசலுக்கு வந்த கருணாநிதி
அப்போது அவரிடம் மோடி நலம் விசாரித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து வீட்டு வாசலில் குழுமியிருந்த தொண்டர்களை பார்ப்பதற்காக கருணாநிதி வீட்டு வாசலுக்கு அழைத்து வரப்பட்டார்.
தொண்டர்கள் உற்சாகம்
அப்போது தொண்டர்களை பார்த்து கருணாநிதி கை அசைத்தார். இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள் கருணாநிதி வாழ்க என உற்சாக முழக்கமிட்டனர்.
புன்முறுவல் பூத்தார்
தொண்டர்களின் உற்சாக முழக்கத்தால் மகிழ்ச்சி அடைந்த கருணாநிதி புன்முறுவல் பூத்தார். சில நிமிடங்கள் தொண்டர்களை சந்தித்த அவர் வீட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டார்.