அதே சக்ஸஸ் பார்முலா.. பாமகவிற்கு எதிராக வேல்முருகனை களமிறக்கும் திமுக.. ஸ்டாலின் உடன் சந்திப்பு!
உள்ளாட்சி தேர்தலில் பாமகவிற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை களமிறக்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பாமகவிற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை களமிறக்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக திமுக தனது பொதுக்குழுவை கூட்டி ஏற்கனவே ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுத்துவிட்டது. மாவட்ட செயலாளர்களை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும்படி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது அதிக மேயர் பதவியை வெல்ல வேண்டும். அதிமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாக்கள்... திமுக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
பாமக
உள்ளாட்சி அளவில் திமுகவிற்கு அதிக போட்டியாக இருக்கும் கட்சிகள் என்றால் அது அதிமுகவும், பாமகவும்தான். அதிலும் பாமக, திமுக கட்சிக்கு எதிராக தீவிரமாக அரசியல் செய்து வருகிறது. ஜாதி ரீதியாக இருக்கும் ஆதரவை பாமக திமுகவிற்கு எதிராக திரட்டி வருகிறது. இதில் ஓரளவிற்கு பாமக வெற்றியும் பெற்று விட்டது.
என்ன வெற்றி
நடந்து முடிந்த 2 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இதற்கு சிறந்த உதாரணம். நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இரண்டுமே திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் கோட்டை. ஆனால் அதில் திமுக கூட்டணி தோல்வியை தழுவியது. இதற்கு பாமகவின் பிரச்சாரமும், தொண்டர்களின் கள செயல்பாடும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலின் திட்டம்
இதனால் உள்ளாட்சி தேர்தலில் பாமகவை வீழ்த்த ஸ்டாலின் தீவிரமாக திட்டமிட்டு வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிட்டது. இதில் பாமகவிற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பிரச்சாரம் செய்தார். இவர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
ஆலோசனை செய்தனர்
லோக்சபா தேர்தலுக்கு முன் வேல்முருகன் உடன் ஸ்டாலின் இதற்காக ஆலோசனை செய்தார். வேல்முருகன் செய்த பிரச்சாரம் வன்னியர் வாக்குகளை அப்படியே திமுக பக்கம் திருப்பியது. இதனால் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் முன்னாள் எம்பி அன்புமணி உட்பட எல்லோரும் தோல்வி அடைந்தனர். திமுகவின் இந்த வெற்றிக்கு வேல்முருகன் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார்.
ஆனால் இல்லை
ஆனால் 2 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் வேல்முருகன் திமுகவிற்காக பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் திமுக பெரிய அளவில் வன்னியர் வாக்குகளை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது மீண்டும் வேல்முருகனை பிரச்சாரத்தில் களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று ஸ்டாலின் மற்றும் வேல்முருகன் இருவரும் சந்தித்தனர்.
என்ன சந்திப்பு
இதில் இவர்கள் இருவரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை செய்துள்ளனர். பாமகவுக்கு எதிராக வேல்முருகனை மீண்டும் களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேல்முருகன் - ஸ்டாலின் இருவரும் ஆலோசனை செய்துள்ளனர் என்கிறார்கள்.