அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து.. மத்திய அரசுக்கு விழுந்த சம்மட்டி அடி: கருணாநிதி
சென்னை: மத்திய ஆளுங்கட்சியின் முடிவினை அப்படியே ஆதரிக்காமல், உச்ச நீதி மன்றம் விருப்பு வெறுப்பில்லாமல், இந்திய ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்திடும் நோக்கில் அளித்துள்ள இந்தத் தீர்ப்பினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அருணாசல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியும் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று விடுத்துள்ள அறிக்கையை பாருங்கள்:
மத்திய அரசின் சிந்தனை
மாநிலங்களில் தங்களோடு ஒத்துவராத - கொள்கை ரீதியாக எதிரெதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கட்சிகள் ஆட்சியிலே இருந்தால், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு, எப்படியாவது அந்த ஆட்சியைக் கலைத்து விட்டுத் தங்களுடைய கட்சியை ஊக்கப்படுத்துவதையே தமது தலையாய விருப்பப் பணியாக மத்தியிலே ஆளுபவர்கள் நினைப்பது இந்தியாவில் வழக்கமாகப் போய்விட்டது. ஆனால் அப்படிப்பட்ட பிற்போக்குச் செயல்களுக்கு உச்சநீதிமன்றம் தக்கப் படிப்பினையை அவ்வப்போது புகட்டி வருகிறது.
உத்திரகாண்ட் உதாரணம்
உதாரணமாக, உத்திரகாண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் அரசு நடந்து வந்தது. அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சந்தர்ப்பம் அளிக்காமல் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து நைனிடால் உயர் நீதி மன்றத்தில் நடந்த வழக்கில், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணித்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய உச்சநீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்ததுடன், சட்டசபையில் பலப் பரிட்சை நடத்தி அதனடிப்படையில் முடிவு செய்ய உத்தரவிட்டது. வாக்கெடுப்பில் ஹரீஷ் ராவத் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வரானார்.
அருணாச்சல பிரதேசத்தில் நடந்தது
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் நபாம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. மொத்தம் 60 எம்.எல்.ஏ.க்கள். காங்கிரசின் பலம் 47-ஆக இருந்தது. இதில் 21 எம்.எல்.ஏ. க்கள் முதலமைச்சருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அவர்களுக்கு பா.ஜ.க. வின் 11 எம்.எ���்.ஏ.க்களும் 2 சுயேச்சைகளும் ஆதரவு அளித்தனர். இதற்கிடையே அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
புதிய முதல்வர்
இதை அடுத்து, மாநில ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப் பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த கலிகோ புல் புதிய முதல்வராக பதவியேற்றார். அவருக்கு அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த 18 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், 2 சுயேச்சைகள், 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் நபாம் துகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நீதிபதி ஜெ.எஸ். கேகர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்காத நிலையில், விசாரணை முடிவடைந்து கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, நேற்றைய தினம் (13-7-2016) அளிக்கப்பட்ட உச்ச நீதி மன்றத் தீர்ப்பில், "அருணாசலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பித்தது செல்லாது; அங்கே ஆளுநர் பிறப்பித்த உத்தரவுகள் அரசியல் அமைப்புச் சட்டத்தத்திற்கு விரோதமானவை.; டிசம்பர் 9-ந் தேதிக்குப் பிறகு அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன; அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்" என்று அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
மத்திய அரசுக்கு சம்மட்டி அடி
இது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கிடைத்த பலத்த அடியை அடுத்தடுத்து இரண்டாவது முறையாக விழுந்த சம்மட்டி அடி என்றே சொல்ல வேண்டும். ஓர் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, மாநில ஆளுநரின் உதவியுடன் வேறொரு ஆட்சி மாநில நிர்வாகப் பொறுப்பில் இருக்கும்போது, அந்த ஆட்சி செல்லாத ஆட்சி என்று இந்திய உச்ச நீதி மன்றம் முதல் முறையாகத் தீர்ப்பளித்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான மைல் கற்களில் ஒன்றாகும்.
நபாம் துகி மீண்டும் முதல்வர்
உச்ச நீதி மன்றத் தீர்ப்பை அடுத்து, அருணாச்சல பிரதேச முதல் அமைச்சராக நபாம் துகி நேற்று பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஜனவரி 25-ந் தேதி அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்த பின், பதவியை இழந்த நபாம் துகி, ஐந்தரை மாதங்களுக்குப் பின் முதல்வர் பொறுப்பேற்றுள்ளார்.
பாஜக-வுக்கு 2-வது பின்னடைவு
உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள சிறப்பான இந்தத் தீர்ப்பு மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கும் இரண்டாவது பெரும் பின்னடைவாகவும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த ஜனநாயக ரீதியான வெற்றியாகவும் தான் அரசியல் நோக்கர்களால் கருதப்படும்.
திமுக வரவேற்பு
மத்திய ஆளுங்கட்சியின் முடிவினை அப்படியே ஆதரிக்காமல், உச்ச நீதி மன்றம் விருப்பு வெறுப்பில்லாமல், இந்திய ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்திடும் நோக்கில் அளித்துள்ள இந்தத் தீர்ப்பினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.
மகத்தான தீர்ப்பு
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைத் திட்ட மிட்டுப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்திடும் ஜனநாயக விரோதப் போக்கை, நீண்ட நெடுங்காலமாகவே எதிர்த்துக் குரல் கொடுப்பதில் முன்னணியில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம், மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் இந்த மகத்தான தீர்ப்பு கண்டு களிப்புறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.