தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மாற்றம் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி: மு.க. ஸ்டாலின்!
திருவாரூர்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டது தி.மு.கவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என திருவாரூரில் திமுக செயலாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், "144 தடை உத்தரவு காரணமாகத்தான் லோக்சபா தேர்தலில் தி.மு.க. தோல்வியுற்றது என்று கூறினர்.
ஜாதிமத கலவரம் ஏற்பட்டால் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.தமிழகத்திலேயே முதல் முறையாக தேர்தலுக்கு முதல் நாள் 144 தடை உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.
கலவரம் அதிகம் ஏற்படும் மாநிலங்களில் கூட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் கட்சிகள் பிற கட்சிகளோடு கூட்டணி வைத்தது. அ.தி.மு.கவோ தமிழக தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்தது.
எனவேதான் மாநில தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை நிறைவேறும் வகையில் பிரவீன் குமார் மாற்றப்பட்டுள்ளது தி.மு.கவிற்கு கிடைத்த வெற்றி. ஜெயலலிதா தலைமையில் வெறும் காட்சி ஆட்சி மட்டும் நடந்தது. தற்போது பொம்மை ஆட்சி நடக்கிறது" என்று கூறியுள்ளார்.