சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கும் முன்னரே ஜெ.க்கு வாழ்த்து- நிகழ்ச்சி நிரல் மீறல்: ஸ்டாலின் கண்டனம்
சென்னை: தமிழக சட்டசபையில் நிகழ்ச்சி நிரலை மீறி இரங்கல் தெரிவிக்கும் முன்னரே முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதற்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அண்மையில் காலமான முன்னாள் அமைச்சரும், கடையநல்லூர் எம்.எல்.ஏவுமான செந்தூர் பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பின்னர் சபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தமிழக சட்டசபை கூடிய முதல் நாளே சபையில் ஜெயலலிதா புகழ் பாடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில், சபையில் முதல் நாளான இன்று, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நிகழ்ச்சி நிரலை மீறி சட்டசபையில் இன்று முதல் நிகழ்வாக ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கூட்டப்பட்ட சபையில் நாதஸ்வர இசை ஒலிக்கப்பட்டது வேதனையளிக்கிறது.
ஜெயலலிதாவை வாழ்த்தி சபாநாயகர் பேசுகிறார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர். சட்டசபை கூடிய முதல் நாளே அவை ஜெயலலிதா புகழ்பாடும் மன்றமாக இருந்ததால் கூட்டத்தொடரின் மற்ற நாட்கள் எப்படி நடைபெறும் என்பதை தெளிவாக கணிக்க முடிகிறது.
நிகழ்ச்சி நிரலை மீறி சபையில் முதல் நிகழ்வாக ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
பூரண மதுவிலக்கு குறித்து திமுக அவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.