திமுகவின் 15 தீர்மானங்கள் - பகுதி 2
தீர்மானங்கள் குறித்த விவரம்
6. தூக்குத் தண்டனையை ரத்து செய்க
மனித நேயம் மற்றும் மனித உரிமை அடிப்படையில், உலக நாடுகளில், 140 நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளன. ஆனால் இந்தியாவில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமென, வேண்டுகோள்களும், விமர்சனங்களும் நாள் தோறும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தாலும், இன்னும் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படவில்லை; இரத்து செய்வதற்கான எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு இதுவரையில் முன் வரவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் தூக்கு தண்டனை அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து வாதாடிக் கொண்டிருப்பவர். தூக்குத் தண்டனையின் மூலம் மனித உயிர்களை மனிதாபிமானமற்ற முறையில், முடித்து வைக்க முடியுமே தவிர, குற்றங்களை ஒழிக்கவோ குறைக்கவோ இயலாது. குற்றங்கள் ஒழிக்கப்படுவதற்கு மனமாற்றங்கள் தேவை. அதற்குத் தூக்குத் தண்டனை உரிய தீர்வாகாது. எனவே மத்திய அரசு இதை ஆழ்ந்து பரிசீலித்து துhக்குத் தண்டனையை அறவே ரத்து செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வர முன் வர வேண்டுமென்று மத்திய அரசை இம்மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளுகிறது.
7. காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போதிலும், இதுவரை அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் காவிரி நதிநீரை, விவசாயத்திற்குத் தேவையான அளவு, உரிய காலத்தில் பயன்படுத்த முடியாத சூழ்நிலை தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சட்டப்படி நிறைவேற்ற அமைக்க வேண்டிய காவிரி - மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு இவைகளை உடனடியாக அமைக்க வேண்டுமென மத்திய அரசை இம்மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
8. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக
அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டு மக்களை பெரிதும் பாதித்துள்ளது. மாதந்தோறும் நிகழ்ந்து வரும் விலை ஏற்றத்தால் ஏழையெளிய, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகையோரின் வருவாயையும், வாங்கும் சக்தியையும் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற்கான வழிவகை காணத் தவறியதற்காக, மத்திய, மாநில அரசுகளுக்கு இம்மாநில மாநாடு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
9. கல்விக் கடன்களை தள்ளுபடி செய்க
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், கல்விக் கடன் பெற்று, தங்கள் படிப்பை நிறைவு செய்துள்ளனர்; பலர் படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். கல்வி நிலையங்களில் தங்கள் படிப்பை முடித்த மாணவர்களுக்கு, உடனடியாக வேலை கிடைக்காத நிலையில் அவர்கள் பெற்ற கல்விக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வங்கிகள் கடன் பெற்ற மாணவர்களின் குடும்பங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. மேலும், கடன் பெற்ற மாணவ - மாணவியரின் விவரங்களை பொது அறிவிப்பாகவும், வங்கிகள் வெளியிடுகின்றன. இதனால், மாணவர்களும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மனரீதியாக பெரிதும் பாதிப்படைந்து சோர்வுற்றுள்ளனர். வங்கிகள் கடைப்பிடிக்கும் இத்தகைய மனிதாபிமானமற்ற அணுகுமுறையினை வங்கிகள் மாற்றிக் கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்வதோடு, வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வழி வகை காண வேண்டுமென்று வேண்டுமென மத்திய அரசை இம்மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
10. தமிழக மீனவர்களைப் பாதுகாத்திடுக
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கடலோர மாவட்ட மீனவர்கள் நாகப்பட்டினத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களை நாகப்பட்டினத்துக்கு அனுப்பி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரதப் போராட்டத்தைக் கை விடச் சொன்னதுடன், மத்திய அரசுடன் பேசி ஒரு தீர்வுக்கு வழிகாண அறிவுறுத்தியதோடு, மீனவப் பிரதிநிதிகளை அவரே டெல்லிக்கு அழைத்துச் சென்றார். டெல்லியில் பிரதமரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்து மீனவப் பிரதிநிதிகள் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தினர். அப்போது ஜனவரி 20ஆம்தேதி வாக்கில் இரண்டு நாட்டு மீனவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுமென்று உறுதி அளிக்கப்பட்டது. இறுதியாக, 27.1.2014 அன்று இருநாட்டு மீனவர்களின் கூட்டம் நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஒரு சிலப் பிரச்சினைகளில் தீர்வு எட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்திருந்தாலும் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசே இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்குரிய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநில மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.