டேய் எழும்புடா... கூட்டுறவு இணைப்பதிவாளரை ஒருமையில் அழைத்து திட்டிய எம்எல்ஏ பிரின்ஸ்
நாகர்கோவிலில் கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தை எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கூட்டுறவு இணைபதிவாளரை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டு திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ பிரின்ஸ், இணைப்பதிவாளரை ஒருமையில் பேசி அச்சுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 166 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலுக்கு செவ்வாய்கிழமையன்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் அன்று மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேற்று காலைதான் பட்டியல் ஒட்டப்பட்டது.
அதிமுகவினர் வெற்றிபெறும் வகையில் புதிதாக மனுக்கள் சேர்க்கப்பட்டு பேனல் தயாரிக்கப்பட்டதாகவும், அந்த பட்டியல் நேற்று காலை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் ஒட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தை எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டனர்.
இதில் எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ்குமார், திமுக நகர செயலாளர் வக்கீல் மகேஷ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
அலுவலகத்தில் இணைப்பதிவாளர் நடுக்காட்டுராஜா தனது நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அப்போது எம்எல்ஏக்கள் நடுக்காட்டுராஜாவின் அறையை முற்றுகையிட்டனர்.
தகுதியான வேட்பாளர் பட்டியல் ஒட்டாமல் முறைகேட்டில் ஈடுபட்டு அதிமுகவினருக்கு சாதகமாக பேனல் தயாரித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், முதல்கட்ட தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை நடுக்காட்டு ராஜா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
எம்எல்ஏக்களை எழுந்து நின்று வரவேற்கவில்லை, மரியாதை தரவில்லை என்று கூறிய பிரின்ஸ், டேய் எழும்புடா என்று ஒருமையில் பேசினார். அடிக்கவும் பாய்ந்தார். அதற்கும் அசராத அதிகாரி நடுக்காட்டு ராஜா, தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து விட்டு வெளியே சென்று விட்டார்.
எம்எல்ஏக்கள் இரவு வரையில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். 8 மணியளவில், 7 கூட்டுறவு சங்கங்களுக்கு மறுதேர்தல் நடத்த கேட்டு கூட்டுறவு ஆணையருக்கு இணைபதிவாளர் பரிந்துரை அனுப்பினார் என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, எம்.எல்.ஏக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதனிடையே தன்னை ஜாதிப் பெயரை சொல்லி 6 எம்எல்ஏக்கள் திட்டியதாக இணை பதிவாளர் நடுக்காட்டுராஜா நேசமணி நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். எம்எல்ஏ, எம்பி, உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை விட கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது பெரும் பாடாக இருக்கேப்பா.