மமக அறிவிப்பை தொடர்ந்து உ.பேட்டையில் திமுக போட்டி..ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக அறிவிப்பு
சென்னை: உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடாததைத் தொடர்ந்து திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதில் ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆம்பூர் தொகுதியில் நசீர் அகமது, நாகை தொகுதியில் ஜெபருல்லா, தொண்டாமுத்தூரில் செய்யது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் உளுந்தூர்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அறிவித்தது. அந்த தொகுதியை மீண்டும் திமுகவிற்கு வழங்குவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும், திமுக வேட்பாளராக ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.