சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதிக்க மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறது திமுக... !
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. வரும் 21ம் தேதி சென்னையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 21.3.2016 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அதில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அன்பழகன் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கவே இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதாக அன்பழகன் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் விளக்கி ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது.
தேமுதிக கூட்டணிக்கு வராமல் போய் விட்ட நிலையில் முக்கிய கட்சியாக காங்கிரஸ் மட்டுமே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதுதவிர பல்வேறு குட்டிக் கட்சிகள் மற்றும் ஜாதி, மத அமைப்புகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.