காவிரி... 22-இல் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்
காவிரி விவகாரத்தில் வரும் 22-ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை: காவிரி விவகாரத்தில் ஆலோசனை நடத்த வரும் 22-ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கர்நாடகத்துக்கு தண்ணீர் அளவை அதிகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கும் கருப்புக் கொடி காட்டப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அது தமிழகத்துக்கு சாதகமாக இல்லை என்பதால் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு எதிராக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட இருந்தது. பின்னர் அது ஏதோ ஒரு காரணத்துக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே கமல் கட்சி சார்பில் நேற்றைய தினம் திநகரில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் கமல் அழைத்திருந்தார். எனினும் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் காவிரி தொடர்பாக விவாதிக்க வரும் 22-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.