தேர்தல் தோல்வி - ஜூன் 2ல் கூடுகிறது திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு
சென்னை: திமுகவின் லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்க கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை கட்சி மேலிடம் கூட்டியுள்ளது.
ஜூன் 2ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆராய்ந்திடவும்; எதிர்காலத்தில் கழகத்தின் வலிமையையும், வளர்ச்சியையும் மேலும் பெருக்குவதற்கேற்ப நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து முதல் கட்டமாக ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கவும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக்கூட்டம் வரும் ஜூன் திங்கள் 2ம் நாள் காலை 10 மணி அளவில், அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில், கழகத்தலைவர் கலைஞர் நடைபெறும்.
மேலும், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளையொட்டி, அடுத்தடுத்து கழகத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு ஆகிய குழுக்களின் கூட்டத்திற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அழகிரி - ஸ்டாலின் மோதல் பின்னணியில்
தேர்தல் தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்திருந்த மு.க.அழகிரி, தோல்விக்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரவும் கருணாநிதி குடும்பத்துக்குள்ளேயே சிலர் முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் அதிரடியாக மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக பரபரப்பைக் கிளப்பினார். ஆனால் கட்சி மேலிடத்தின் கோரிக்கையை ஏற்று அதை அவர் பின்னர் கைவிட்டார். இந்த பரபரப்பான பின்னணியில் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.