தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக பங்கேற்காது - கருணாநிதி அறிவிப்பு
சென்னை: ஆளும் கட்சியினரின் அடாவடிப் போக்கை கண்டிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் இனி பங்கேற்க மாட்டார்கள் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், அமைச்சர்களும் எது பேசினாலும் அதனை அனுமதிப்பதும், ஜனநாயக உணர்வோடு, தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினர் பதில் கூற முனைந்தாலும், அதற்கு அனுமதி மறுப்பதும் தான் தொடருகிறது.
இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எதிர்க் கட்சிகளை எத்தனை முறை அவையிலிருந்து வெளியேற்றினார்கள் என்ற கணக்கைப் பார்த்தாலே ஆளுங்கட்சியினரின், குறிப்பாகப் பேரவைத் தலைவரின் ஜனநாயக அணுகுமுறை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அது போலவே பிரதான எதிர்க் கட்சியும், அதன் உறுப்பினர்களும், அதற்கு அடுத்த நிலையிலிருந்து திமுக, அதன் உறுப்பினர்களும் பேரவை நடவடிக்கைகளைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை, அவை நடவடிக்கைகளைக் கவனித்தாலே, பேரவைத் தலைவர் எதிர்க் கட்சிகள் மீது எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆளுங்கட்சி தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்பதால், தாங்கள் எதை நினைத்தாலும் செய்யலாம் என்ற போக்கில் நடந்து கொள்கிறார்கள். அலுவல் ஆய்வுக் குழுவாக இருந்தாலும், உரிமைக் குழுவாக இருந்தாலும் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்வதே இல்லை.
ஆளுங்கட்சி உறுப்பினர் தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக பேசுவதும், அதை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் பதில் சொல்ல அனுமதி மறுப்பதும், கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் எதிர்க் கருத்துகளைச் சொன்னால், அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னையோ என் குடும்பத்தினரையோ எப்படிப் பேசினாலும் அதை அனுமதிப்பதும் என்ற போக்கில் பேரவை நடைபெறுகிறது.
இந்த நிலையில் பேரவையில் திமுக இனியும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டுமா என்பதைப்பற்றி ஆய்வு செய்து, கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்வதோடு, ஆளுங்கட்சியினரின் இப்படிப்பட்ட அடாவடிப் போக்கினை மக்கள் மன்றத்தின் முன் எடுத்து வைப்பது என்றும் முடிவெடுக்கப்படுகிறது என கூறியுள்ளார் கருணாநிதி.