ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை வழக்கு- சிபிஐ விசாரணை நடத்த திமுக கோரிக்கை
தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் இருபது பேர், ஆந்திராவில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை அதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, கொலை செய்த காவல் துறையினரைக் காப்பாற்ற அந்த ஆந்திர மாநிலக் காவல் துறை முடிவு செய்துள்ளதை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இந்த வழக்கு பற்றி நேற்றையதினம் கருத்துக் கூறிய மனித உரிமை ஆணைய உறுப்பினர், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மனித உரிமை மீறல் விழிப்புணர்வு குறைவாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
எனவே இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இந்த வழக்கினை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து உரிய விசாரணை மேற்கொண்டு உண்மைகளை வெளிக் கொணரத் தேவையான அரசியல் அழுத்தத்தைத் தமிழக அரசு ஆந்திர அரசுக்குத் தருவதோடு, தமிழக அரசே நேரடியாக வழக்குத் தொடுத்து இருபது தமிழர்களின் படுகொலையில் நீதி நிலைநாட்டப் படுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.