டெங்குவை சுகாதார பேரிடராக அறிவிக்க கோரி திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
டெங்குவை சுகாதாரர் பேரிடராக அறிவிக்க வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை; டெங்குவை சுகாதார பேரிடராக தமிழக அரசு அறிவிக்க கோரி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும் அரசியல் பரபரப்புகளுக்கிடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 10.15 மணிக்கு ஸ்டாலின் வந்ததும் கூட்டம் தொடங்கியது.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் முக்கியத் தலைவர்களோடு 63 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர், உறுப்பினர் சேர்க்கை குறித்த நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக மா.செ.,க்கள் விவரித்தார்கள்.
சுகாதாரப் பேரிடராக டெங்கு !
கூட்டத்தில் தமிழ்நாட்டின் முக்கியப்பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டது. தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அரசு அதை மூடி மறைத்துவருகிறது. கடந்த 18 நாட்களில் மட்டும் 150க்கும் அதிகமானோர் டெங்குவால் இறந்து இருந்தாலும் அது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதனால் உடனடியாக டெங்குவை மாநில சுகாதாரப் பேரிடராக அறிவித்து போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்
உள்ளாட்சிப் பதவிகள் கடந்த ஒரு ஆண்டாக காலியாக இருக்கிறது. இதனால் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு தேர்தலை நடத்துவது குறித்து எந்த ஆர்வமும் காட்டவில்லை. எனவே, உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டது.
உரிமைகளை தாரைவார்த்த மாநில அரசு
டெல்லியில் இருக்கும் மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது தற்போதைய அ.தி.மு.க அரசு. அதோடு மாநில அரசின் உரிமையையும் அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்திருக்கிறது. உடனடியாக இந்தப் போக்கை ஆளும் நிர்வாகத்தில் இருப்பவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம்
மேலும் தற்போதைய அரசின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ‘நமக்கு நாமே' போல மீண்டும் மக்களைச் சந்திக்க ஸ்டாலின் நவம்பர் முதல் வாரத்தில் பயணம் தொடங்குகிறார். இது தொடர்பாகவும் மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.