ஏமாந்த திமுக வாரிசுகள்.. 'முரட்டு பக்தர்' மகனுக்கு மட்டும் வாய்ப்பு- துரைமுருகன் அப்செட்!!
சென்னை: லோக்சபா தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுகவில் ஏகப்பட்ட வாரிசுகள் சீட்டு கேட்டு காத்திருந்தனர். ஆனால் அவர்களில் தூத்துக்குடி பெரியசாமி மகன் ஜெகனுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு கொடுக்கும்போதே திமுக பிரமுகர்கள் பலரும் தங்களது வாரிசுகளுக்காகவும் மனு கொடுக்க வைத்து அசர வைத்தனர்.
துரைமுருகன் மகன்
இந்த வகையில் வேலூர் தொகுதியை தமது மகன் கதிர் ஆனந்துக்கு பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக 100க்கும் மேற்பட்டோரை களமிறக்கினார் துரைமுருகன். இதில் கருணாநிதியை திடுக்கிட்டுப் போனார்.
கருணாநிதி கோபம்
தினமும் நம்மை சந்திக்கும் துரைமுருகன் நம்மிடம் கூட இந்த தகவலை சொல்லவில்லையே என்று கடுப்படித்ததுடன் ஒருநாள் முழுவதும் துரைமுருகனை சந்திப்பதையும் தவிர்த்தார். பின்னர் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போதும் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கிடைக்கவிடாமல் பார்த்துக் கொண்டார்.
வேலூர் கிடைக்கலை.
ஆனால் வேறவழியே இல்லாமல் வேலூரை முஸ்லிம் லீக் கட்சிக்கு விட்டுக் கொடுத்தது திமுக. அப்போது கண்கலங்கிப் போனார் துரைமுருகன். 1980களில் முரசொலி மாறன் கேட்ட தென்சென்னையை காங்கிரஸ் கட்சியின் ஆர். வெங்கட்ராமனுக்கு தாம் வாங்கிக் கொடுத்த கதையை சொல்லி துரைமுருகனை தேற்றியிருக்கிறார் கருணாநிதி.
திண்டுக்கல் ஐ.பி.எஸ்
இதேபோல் திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் மகன் செந்திலும் திண்டுக்கல் லோக்சபா தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அதுவும் திமுக இளைஞரணி துணைச் செயலராக இருப்பதால் மிகவும் அதிக நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் மூத்த அரசியல்வாதியான காந்திராஜனுக்கு சீட் கிடைத்துவிட்டது. அவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர் என்றாலும் அவருடைய கெட்ட பெயர் இல்லாத இமேஜ்க்கு கிடைத்த வாய்ப்பு என்கின்றனர் திமுகவினர்.
வென்ற பொங்கலூர்
கோவை பொங்கலூர் பழனிச்சாமி. அவரது மகன் பைந்தமிழ் பாரி, மருமகன் டாக்டர் கோகுல் ஆகியோரும் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியை கேட்டிருந்தனர். இதில் பொங்கலூர் பழனிச்சாமிக்கு மட்டும் பொள்ளாச்சி தொகுதி கிடைத்துள்ளது.
மு.க.முத்துவுக்கும் சீட் இல்ல.
பொள்ளாச்சி தொகுதியை கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்தார் மு. கண்ணப்பன் மகன் மு.க. முத்து. அவருக்கும் சீட் இல்லை என்றாகிவிட்டது.
'ஆனா' கானா வாரிசுகள்
திருநெல்வேலி தொகுதியை கேட்டு முன்னாள் சபாநாயகரான "ஆனா" என்ற ஆவுடையப்பன் மகன் பிரபாகரனும் அதே திருநெல்வேலி தொகுதிக்கு மாவட்ட செயலர் "கானா" என்ற கருப்பசாமி பாண்டியன் மகன் சங்கரும் விருப்ப மனு கொடுத்தனர். தற்போது இருவருக்குமே சீட் இல்லை என்றாகிவிட்டது.
சுப.த. சம்பத்
ராமநாதபுரம் தொகுதியை கேட்டு சுப. தங்கவேலன் மகன் சுப.த.சம்பத் விருப்ப மனு கொடுத்துப் பார்த்தார். அதுவும் நடக்கவில்லை.
எ.வ.வே. கம்பன்
திருவண்ணாமலை தொகுதியை எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கு வாங்கித் தருவதில் மும்முரம் காட்டினார். அதுவும் நடைபெறவில்லை.