தேர்தல் தோல்வி எதிரொலி.. ஜெ. பாணி அதிரடியில் குதித்த கருணாநிதி.. 3 மா.செக்கள் நீக்கம்!
சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வி எதிரொலியாக திமுகவில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி செல்வன், கோவை மாநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வீரகோபால், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் பெ.கி. துரைராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்ற கனவில் இருந்த திமுகவிற்கு தேர்தலில் தோல்வியே பரிசாக கிடைத்தது. இதற்குக் காரணம் திமுகவில் தொகுதி பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் பலர் சரியாக செயல்படவில்லை என்றும் உள்ளடி வேலையில் ஈடுபட்டனர் என்றும் கூறப்பட்டது.
அதிமுக போல திமுகவில் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் திமுகவினர் பலரும் குமுறி வந்தனர்.
இந்த நிலையில் திமுகவில் மூன்று மாவட்ட நிர்வாகிகளை நீக்கி அவர்களுக்கு பதிலாக புதிய பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
கொங்கு மண்டலத்தில் திமுக பலத்த அடிவாங்கியது. இதனையடுத்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து காந்தி செல்வன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பொறுப்பாளராக இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல கோவை மாநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வீரகோபால் நீக்கம் செய்யப்பட்டு பொறுப்பாளராக முத்துச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் பெ.கி. துரைராஜ் நீக்கப்பட்டு பொறுப்பாளராக சிவபத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் அளித்து வரும் புகாரின் பேரில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. வரிசையாக சாட்டை சுழலும் என்று எதிர்பார்க்கலாம்.