வேட்பாளர் நேர்காணலின் போது மா.செ.க்களுக்கு 'கெட் அவுட்'.... அதிர்ச்சி வைத்தியம் தந்த திமுக தலைமை!!
சென்னை: திமுகவில் குறுநிலமன்னர்களாக மாவட்ட செயலாளர்கள்தான் இருக்கிறார்கள்....அவர்கள் கை நீட்டும் நபர்களே கட்சி வேட்பாளர்கள், கட்சி பதவிகளை அனுபவிக்கிறார்கள் என்ற நீண்டகால விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடியாக வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணலில் மாவட்ட செயலாளர்களை வெளியேற்றிவிட்டது திமுக தலைமை.
சட்டசபை தேர்தலில் திமுக வலுவான கூட்டணிக்காக போராடிக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொண்டுள்ளது. தேமுதிக என்னதான் விமர்சனம் செய்தாலும் எப்படியும் தங்களுடன் வந்துவிடும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறது திமுக.
நேர்காணல் தொடக்கம்
இந்த ஜோரோடு வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணலை நேற்று முதல் நடத்திக் கொண்டிருக்கிறது அக்கட்சி தலைமை. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகனை உள்ளடக்கிய குழுவினர் இந்த நேர்காணலை நடத்தி வருகின்றனர்.
மா.செ.க்கள் கெட் அவுட்
வழக்கமாக திமுகவில் இப்படியான வேட்பாளர்கள் நேர்காணலின் போது அந்தந்த மாவட்ட செயலாளர்கள் உடன் இருக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் நேற்று தொடங்கிய இந்த நேர்காணலில் மாவட்ட செயலாளர்களை வெளியே அனுப்பிவிட்டது திமுக தலைமை. இதனால் மாவட்ட செயலாளர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
3 கேள்விகள்
இதனால் தாம் நினைப்பவரை வேட்பாளராக்கவும் முடியாமல், ஒருவர் வேட்பாளராவதை தடுக்கவும் முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கதான் முடிந்தது மா.செ.க்களால்.... மேலும் நேர்காணலுக்கு வந்தவர்களிடமும் என்ன ஜாதி, எவ்வளவு செலவு செய்ய முடியும்? வெற்றி வாய்ப்பு எப்படி? ஆகிய கேள்விகள்தான் பிரதானமாக கேட்கப்பட்டிருக்கிறது.
நெல்லையில் அதிகம்பேர்
முதல் நாளான நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 135 பேர், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 205 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேரை தேர்வு செய்து அவர்களில் ஒருவரை வேட்பாளராக அறிவிப்பது என திமுக முடிவு செய்துள்ளது.
கட்சி ஒழுங்காகிவிடும்..
மாவட்ட செயலாளர்கள் இல்லாததால் வேட்பாளர்கள் சுதந்திரமாக தங்களது கருத்தை தலைமையிடம் தெரிவிக்க முடிந்ததாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இப்படியான ஒருநிலைமை நீடித்தால்தான் கட்சி ஒழுங்காக இருக்கும் என்ற கருத்தும் திமுகவினரிடத்தில் வெளிப்படுகிறது.